வவுனியா உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அரச மருந்தகங்களை தவிர மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு!!

439


அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கிய ஆலோசனைக்கமைய வவுனியாவிலுள்ள மருந்தகங்கள் , சுப்பர் மார்க்கெட்டுகளை மூடுமாறு வவுனியா பொலிஸாரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.



மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத நிலையங்களில் ஏனையப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.



அத்துடன் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் குறித்த வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வர்த்தக நடவடிக்கைகள் முற்கொள்ளப்படுவதாகவம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.


இதனாலேயே பொலிஸ்மா அதிபர் இவற்றை மூடுமாறு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு மூடாதிருக்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனையுள்ளதாக மேலும் வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து வவுனியாவிலுள்ள அனைத்து சுப்பர் மார்க்கட், பார்மசிகள் அனைத்தும் உடனடியாக இன்று மதியம் 3.00 மணியளவில் மூடப்பட்டதுடன் மூடப்படதாக பார்மசிகளுக்கு வவுனியா பொலிஸாரினால் அறிவுறுத்தலும் வழங்கப்படுகின்றது.