ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு கொஞ்சகாலம் விலகி இருந்தவர் பின்னர் தமிழ்ப்படம் படம் மூலம் குத்துவிளக்கு குத்துவிளக்கு என்று குத்தாட்டம் போட்டு ரீ-என்ட்ரி கொடுத்தார்.
பிறகு தனக்கு ஏற்ற வேடங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். தற்போது வடகறி, பொன்னொன்று கண்டேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் பொன்னொன்று கண்டேன் என்ற படத்தில் மீண்டும் ஒரு கலக்கல் குத்தாட்டம் ஆடியுள்ளார்.
இதுகுறித்து கஸ்தூரி அளித்த பேட்டி, பொன்னொன்று கண்டேன் படத்தின் தயாரிப்பாளர் எனது நண்பர். அவர் இந்தப்படத்தில் ஒருபாட்டுக்கு ஆட வேண்டும் என்று என்னை கேட்டுக்கொண்டார். அதனால் அப்படத்தில் ஆடினேன்.
இதுதவிர வடகறி என்ற படத்தில் அண்ணி கரக்டரில் நடித்து வருகிறேன். சினிமாவில் நடிப்புக்கு தீனி போடும் வகையில் நடிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை. எனக்கேற்றபடி இளமையான வேடங்கள் கிடைத்தால் மட்டுமே நான் நடிப்பேன்.
சினிமாவில் படங்கள் இல்லாதபோது வந்த வாய்ப்பு தான் புதுயுகம் தொலைக்காட்சியில், நான் நடத்திய குவிஸ் நிகழ்ச்சி. வீட்டில் சும்மாவே இருக்க பிடிக்கவில்லை, அதனால் அந்த நிகழ்ச்சியை நடத்த சம்மதித்தேன். இப்போது அந்த நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது.
நான் எனது கணவரை பார்க்க அமெரிக்கா செல்கிறேன். மீண்டும் ஏப்ரலில் தான் இந்தியா திரும்புவேன். இந்தியா வந்ததும் நிறைய தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.