கொரோனா பரவலால் தெஹிவளையை சேர்ந்த நபர் மரணம் : தீவிரமடையும் பாதுகாப்பு!!

608

கொரோனா பரவலால்..

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று ஆறாக அதிகரித்துள்ளது. ஆறாவது மரணம் இன்று காலை ஏற்பட்டதாக சுகாதார துறை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தெஹிவளையை சேர்ந்த 80 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் மேலும் இரண்டு கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் நான்கு பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய இன்றைய தினம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 42 பேர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களுக்கு அருகில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் கண்டி அக்குறன பிரதேசத்தில் இருந்து கலேவெல, புலனவெவ பிரதேசத்திற்கு வந்த நபர் அந்த வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.