கொரோனா வைரஸ்..
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், தற்போது 16 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 95 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
ஆரம்பத்தில் சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த சீனாவின் வுஹான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்டிருந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கினறது.
அதிலும் குறிப்பாக அமெரிகாவை கொரோனா வைரஸ் நிலைகுலைய செய்துள்ளது. இது வரையில், அங்கு 466,546 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 16,607 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாள் தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக கழக ஆராய்ச்சி குழு வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2வது முறையாக கொரோனா தொற்றினால் ஒரே நாளில் 1,973 பேர் பலியாகி உள்ளனர்.
இது அதற்கு முந்தைய நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட சற்று கூடுதலாகும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.