விசேட சலுகை..

வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவோருக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள அனைத்து வகையிலான வைப்புப் பணங்களையும் இலங்கையில் வைப்புச் செய்வதற்கு இதுவரையில் காணப்பட்ட செலாவணி விதிமுறைகள் மற்றும் வரி கெடுபிடிகள் தளர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

இவ்வாறு வெளிநாடுகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை பூரண அனுமதி வழங்கியுள்ளது.

அந்நிய செலாவணிகள் வைப்புச் செய்யப்படும் போது வழங்கப்படும் வழமையான வட்டிக்கு மேலதிகமாக 2 வீத கூடுதல் வட்டி வழங்கப்படும்.

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையில் முதலீடு செய்ய இது ஓர் சிறந்த சந்தர்ப்பம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.




