புஸ்பராணி நாகராஜா..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த புஸ்பராணி நாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

56 வயதான இவர் மூச்சு திணறல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக மருத்து சான்றிதழ்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவரும் கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சுயநினைவின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவரின் மூன்று பிள்ளைகளும் சுயதனிப்படுத்தலில் இருப்பதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில், 2,055,782 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 133,101 பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில், கொரோனா வைரஸ் தொற்றினால் 26,897 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 898 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




