கொரோனா..

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 15 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை269 ஆக அதிகரித்துள்ளது. மேலும், குறித்த 15 கொரோனா தொற்றாளர்களும், ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானோருடன் நெருங்கிப் பழகிய நிலையில், கொழும்பு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 91 பேர்முற்றாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இன்றைய தினம் 5 பேர் கொரோனா தொற்றில் இருந்துகுணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் நாட்டில் இதுவரை 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 171 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள்கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 74 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 45 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 31 பேரும் கொரோனாதொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டின் 11 மாவட்டங்கள் தொடர்ந்தும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அற்ற மாவட்டங்களாக காணப்படுவதுடன், 7 மாவட்டங்களில் 2 அல்லது அதற்கும் குறைவான கொரோனாதொற்று உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.




