தனிமைப்படுத்தல் மையங்களுக்கு..

கொழும்பில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தை, மருதானை, ஹசல்வத்தை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய மாணவர்கள் உள்ளடங்கலாக சுமார் ஆயிரத்து 100 பேர் வடக்கிலுள்ள 6 தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பலாலி, கொடிகாமம், கிளிநொச்சியில் இரணைமடு, இயக்கச்சி, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களை இவர்கள் வந்தடைந்தனர்.

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரம்பலாக அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, பாகிஸ்தானில் தங்கியிருந்த இலங்கை மாணவர்கள் நேற்றுமுன்தினம் அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

வடக்கில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் பலாலியில் உள்ள விமானப் படையினரின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 99 பேரும், கொடிகாமத்தில் 350 பேரும், கேப்பாப்பிலவில் 120 பேரும், இரணைமடுவில் 200 பேரும், இயக்கச்சியில் 170 பேரும், பம்பைமடுவில் 100 பேருமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-தமிழ்வின்-




