பாடசாலைகளுக்கு நேர அட்டவணை : விசேட சந்திப்புகளில் கல்வியமைச்சின் செயலாளர்!!

347

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் எச்.எம்.சித்ரானந்தா நாடளாவிய ரீதியில் அந்தந்த மாகாண கல்வி பணிப்பாளர்களுடன் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் நாளைய தினம் கல்வியமைச்சின் செயலாளர் சித்ரானந்தா கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் கொரோனா அச்சத்தால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீளத்திறப்பது உள்ளிட்ட கள நிலவரங்கள் பற்றி விரிவாக இதன்போது கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது.

கல்வியமைச்சின் செயலாளர் இதுவரை தெற்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் கல்வி பணிப்பாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கருத்துகளை அறிந்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாளை கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து தொடர்ந்து வடக்கு, ஊவா மாகாணக் கல்வி பணிப்பாளர்கள் மற்றும் மத்திய மாகாண கல்வி பணிப்பாளரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

சகல மாகாண கல்வி பணிப்பாளர்களையும் சந்தித்த பின்னர் ஒரு முடிவுக்கு வரவிருப்பதாகவும், பாடசாலைகளுக்கான விசேட நேர அட்டவணையை தயாரிக்கவிருப்பதாகவும் கல்வியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொதுவான பத்தாம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளை முதலில் ஆரம்பிப்பதெனவும், சிலவேளை மாகாணத்திற்கு மாகாணம் விசேட நிகழ்ச்சி நிரலின் படி பாடசாலைகள் திறக்கப்படலாமெனவும் தெரியவருகிறது.

-தமிழ்வின்-