நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 6 மாத குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு : மூவர் படுகாயம்!!

534

விபத்து..

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை துறை முகத்துவாரம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் 6 மாத குழந்தை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது 6 மாத குழந்தையும், மோட்டார்சைக்கிளை செலுத்திய 17 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் 6 மாத குழந்தையின் தந்தையான சேருநுவர – இலங்கை துறைமுகத்துவாரம், மத்திய வீதியைச் சேர்ந்த துஸேந்தன், அவரது மனைவி டிலக்ஸனா மற்றும் மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்த கே.மயூரன் (17 வயது) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஈச்சிலம்பற்று-புன்னையடி பகுதியைச் சேர்ந்த வர்ணகுமார் டிலக்சன் (17 வயது) என்பவருடைய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.

அத்துடன் 6 மாத குழந்தையான கன்சிகாவின் சடலம் தற்பொழுது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.