கர்ப்பிணி தமிழ்ப்பெண்..
வெளிநாட்டில் சி க்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி செவிலியரை கனிமொழி எம்.பி. பாதுகாப்பாக மீட்டு சொந்த ஊரில் சேர்த்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட பெரியதாழை கிராமத்தை சேர்ந்தவர் டீனு. இவர் அயர்லாந்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊருக்கு விடுமுறைக்கு வந்த செவிலியர் டீனு, ரொசில்டன் என்பவரை மணந்தார். இதனிடையே மீண்டும் அயர்லாந்துக்கு பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் செவிலியர் டீனு, தன்னுடன் தனது கணவர் ரொசில்டனையும் சுற்றுலா விசாவில் அயர்லாந்து அழைத்துச் சென்றார்.
செவிலியர் டீனுவின் கணவர் ரொசில்டனுக்கு பணி கிடைக்காததாலும், சுற்றுலா விசாவுக்கான காலக்கெடு முடிந்ததாலும் 2019 டிசம்பரில் அவர் தூத்துக்குடி திரும்பினார். இந்நிலையில் தனியாக தங்கி அயர்லாந்தில் பணியாற்றி வந்த டீனு, பேறுகாலத்திற்காக ஏப்ரல் மாதம் 19-ம் திகதி தமிழகம் திரும்ப விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார்.
அதற்குள் கொரொனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச அளவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதுடன் பொதுமுடக்கமும் கொண்டு வரப்பட்டது. அயர்லாந்தில் கவனித்துக்கொள்ள ஆட்களின்றி தவித்து வந்த 8 மாத கர்ப்பிணி மகளை ஊருக்கு மீட்பதற்கான முயற்சிகளில் டீனுவின் பெற்றோர் இறங்கினர்.
இது தொடர்பான விவரத்தை ஒரு கடிதத்தில் தெரிவித்து அதனை கனிமொழி எம்.பியிடம் செவிலியர் டீனுவின் பெற்றோர் வழங்கினர். அதைப்பார்த்த கனிமொழி, உடனடியாக கர்ப்பிணி செவிலியரை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டினார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்ற கனிமொழி, டீனுவை மீட்பதற்காக கடும் அழுத்தம் கொடுத்து வந்தார். இதனிடையே கனிமொழியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக செவிலியர் டீனுவை மீட்பு விமானத்தில் அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதையடுத்து அயர்லாந்தில் இருந்து லண்டனுக்கு கார் மூலம் சென்ற டீனு, அங்கிருந்து சிறப்பு மீட்பு விமானத்தில் மும்பை வந்திறங்கினார். மும்பையில் இருந்து மற்றொரு விமானத்தில் சென்னை வந்த அவர் கார் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.
தூத்துக்குடியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்ற செவிலியர் டீனு, உணர்ச்சிபொங்க நன்றி தெரிவித்ததுடன் நீங்க செய்த உதவியை என் உடலில் உயிர் இருக்கும் வரை மறக்கமாட்டேன் எனக் கூறினார். அவரிடம் நலம் விசாரித்த கனிமொழி குழந்தை பிறந்தால் சொல்லி அனுப்புங்க வந்து பார்க்கிறேன் எனக் கூறி வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார்.