ஆறுமுகன் தொண்டமானுக்காக திறக்கப்படும் நாடாளுமன்றம்!!

648

ஆறுமுகம் தொண்டமான்

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் இன்று (28.05.2020) நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை 14.45 முதல் காலை 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்னால் உள்ள மண்டபத்தில் பூதவுடல் வைக்கப்படவுள்ளது.

பின்னர் பூதவுடன் காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் மற்றும் 8வது நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொண்டமானின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அஞ்சலி செலுத்தவுள்ள அரசியல்வாதிகள் அனைவரும் காலை 10.30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதன்பின்னர் அன்னாரின் பூதவுடல் கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட்டில் நடைபெறவுள்ளன. இறுதிக்கிரியைகள் அரச அனுசரணையில் இடம்பெறும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பூதவுடல் நாளை இறம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, நாளை மறுதினம் (30) கொட்டகலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று முன்தினம் இரவு காலமானார்.