பாலைவன வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு படையெடுக்கும் ஆபத்து?

2170

வெட்டுக்கிளிகள்..

வட இந்தியாவில் படையெடுத்துள்ள பாலைவன வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் எச்சரிகையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.M.W.வீரகோன் இதனை கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த அரச திணைக்களங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது பாகிஸ்தானை நோக்கி படையெடுத்துள்ளது.

இந்நிலையில், பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் இலங்கையில் ஏற்பட கூடிய சாத்தியம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

விவசாய அமைச்சு உள்ளிட்ட திணைக்களம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றது, அச்சுறுத்தலை சமாளிக்க செயற்திட்டத்தை கொண்டு வர பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பூச்சியியல் வல்லுநர்கள், பயிர் வல்லுநர்கள் மற்றும் பிராந்திய வேளாண்மை இயக்குநர்கள் அடங்கிய பணிக்குழு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. அவர்கள் தங்கள் வயல்களில் வெட்டுக்கிளிகளைக் கண்டால் அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு அறிவுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெட்டுக்கிளி படையெடுப்பை கட்டுப்படுத்த தேவையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் இரசாயனங்களை அடையாளம் காணவும் பணிக்குழுக்கு அறிவுறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் அவர்கள் பாதுகாப்புப் படையினரின் உதவியையும் நாடுவார்கள்” என அவர் மேலும் கூறியுள்ளார்.