வெளிநாட்டிற்கு பிழைப்பு தேடிச் சென்ற தமிழர் சிறுவனின் உயிரை காப்பாற்ற செய்த செயல்!!

908

தமிழக வாலிபருக்கு பாராட்டுகள்..

வங்கதேசத்தை சேர்ந்த சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய தமிழக வாலிபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. வங்கதேசத்தின் சட்டோக்ராம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நூருல் அப்சல்-மோஹசனாபேகம் தம்பதி. விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு முகமது அசன் ஆரிப் என்ற 9 வயது சிறுவன் உள்ளான்.

முகமது அசன் ஆரிப்பிற்கு 4 வயதில் இருக்கும் போது, இதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. ஆனால் ஏழ்மை, பொருளாதார நெருக்கடியால் மகனின் உடல்நலப்பாதிப்பை உடனடியாக சீரமைக்க முடியவில்லை.’

இந்நிலையில், சிறுவனின் மாமா அப்துல் ரஹீம் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவர் தன்னுடன் வேலை பார்த்த தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் வள்ளியம்மை சாலை பகுதியை சேர்ந்த ராஜசேகரிடம் (36) இது குறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் விடுமுறையில் ஊருக்கு திரும்பிய ராஜசேகர், சிறுவனை தமிழகத்திற்கு அழைத்து வந்து சிகிச்சை பெற்று கொள்ளும் படி கூறியுள்ளார்.

அதன் படி சிறுவன் ஆரிப், தாய் மோஹசனாபேகம், தாய் மாமா அப்துல் ரஹீம் ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் செயல்படும் தனியார் மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவர் சுப்பிரமணியனிடம் சிறுவனை அழைத்து செல்ல, அவர் இதை சரி செய்ய முடியும் என்று கூறி, அவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், கோயமுத்தூர் தனியார் மருத்துவமனைக்கு சென்று உரிய அறுவைசிகிச்சைஅளிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான செலவினை தோப்புத்துதுறையை சேர்ந்த தொழிலதிபர் சுல்தானுல் ஆரிபா என்பவர் ஏற்றுக்கொண்டார். இதேபோல் வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா, சமூக ஆர்வலர் ரஹ்மத்துல்லா மற்றும் ஒரு சில தன்னார்வலர்கள் உதவியோடு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது.

ஆனால், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டது. இதனால், சிறுவனுடன் அவனது தாய், மாமா மூவரும் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டில் தங்கியிருந்தனர்.

இதையடுத்து, கோயமுத்தூரில் சிறுவன் ஆரிப்புக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வேதாரண்யத்தில் தங்கியுள்ள இவர்கள் விரைவில் தாயகம் செல்லவுள்ளனர்.

வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு சுமார் மூன்று மாதங்கள் உணவு அளித்து, தங்க இடமளித்து உதவியதோடு, அந்த குடும்பத்தினர் நோன்பு கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளையும் ராஜசேகர் குடும்பத்தினர் செய்து கொடுத்தனர்.

கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு, மத பாகுபாடு இல்லாமல் தேசம் கடந்து நடந்துள்ள இந்த மனித நேயப்பணியை செய்த ராஜசேகரையும் அவரது குடும்பத்தினரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.