பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்திலும் மாற்றம்!!

2773

பாடசாலைகள்..

பாடசாலைகள் திறந்த பின்னர் அதனை நடத்தி செல்லும் காலம் மற்றும் நேரத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய 3ஆம் மற்றும் 4ஆம் வகுப்புகளில் கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 11.30 வரை பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.

5ஆம் வருப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 12 மணி வரையும், 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 வரையான காலப்பகுதியில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு முதல் 13ஆம் வகுப்பு வரையான பாடசாலை மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதி வெளியானது : நான்கு கட்டங்களில் பாடசாலை மீண்டும் ஆரம்பம்!!

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜுன் மாதம்29ஆம் திகதி திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

13ஆம் 11ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடசாலைக்கு வருவதற்கு முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாடசாலை ஆரம்பிக்கும் நடவடிக்கை 4 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை உயர்தர பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி முதல் கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஜூலை மாதம் ஆறாம் திகதி தரம் 5 தரம் 11 மற்றும் தரம் 13 ஆகிய மாணவர்களுக்காக பாடசாலை 2ஆம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் கட்டமாக ஜூலை மாதம் 20ஆம் திகதி தரம்10 மற்றும் தரம் 12 ஆம் தர மாணவர்களுக்காக பாடசாலை திறக்கப்பட உள்ளன.

அதேபோல் நான்காம் கட்டமாக முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களை தவிர்ந்த 3, 4, 6, 7, 8,மற்றும் 9 தர மாணவர்களுக்காக பாடசாலை ஜுலை மாதம் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.