கொரோனாவை தொடர்ந்து யாழில் மற்றொரு நோய் பரவல் தொடர்பில் அ ச்சம்!!

1053

யாழில்..

யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸை தொடர்ந்து காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

உலகளாவிய ரீதியில் 3 தொற்று நோய்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக கொரோனா, காச நோய் மற்றும் எயிட்ஸ் நோய்களே இவ்வாறு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன.

கொரோனா நோய் தொற்று அல்லது பரவல் தொடர்பில் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு உள்ளதால், அந்த நோய் பரவலை சிறப்பான முறையில் கட்டுப்படுத்தக்கூடியவாறு உள்ளது.

ஆனால் கொரோனா அறிகுறி போன்று இருமல் உள்ளவர்களிடம் இருந்து காச நோய் வேறு பலருக்கு பரவக்கூடிய அபாயம் உள்ளது. காச நோயும் கொரோனா போன்று மக்கள் வழிப்புணர்வுடன் இருந்து கட்டுப்படுத்த வேண்டிய ஒரு கொடிய நோயாகும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிறப்பு நடவடிக்கைகள் காரணமாக காச நோயாளர்கள் இனங்காணப்படுவதில் தடை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படுத்தப்படும் வறுமையும் காச நோய் பெருக்கத்தை ஏற்படுத்தும்.

இருவாரமாக தொடர் இருமல், மாலை வேளைகளில் காய்ச்சல், நெஞ்சு நோ, உடல் மெலிவு, உணவில் விருப்பமின்மை, சளியுடன் குருதி வெளியேறுதல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று சளிப்பரிசோதனை செய்ய வேண்டும்.

காச நோய்க்கு உள்ளான ஒருவருக்கு 6 மாத தொடர் சிகிச்சை மூலமாக அவரை முழுமையாக குணப்படுத்திக் கொள்ளலாம் எனவே இதை கண்டு அஞ்சத் தேவையில்லை.

தற்போது யாழ். மாவட்டத்தில் காச நோய் பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளதுடன், இதுவரை 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள போதும், மேலும் 20 நோயாளர்கள் சமூகத்துடன் இணைந்துள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.