வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பொங்கல் விழாவில் 80 பேருக்கே அனுமதி!!

1088

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவில் 80 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் திங்கள் கிழமை இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கல் விழாவினை முன்னெடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்போது ஆலய நிர்வாகத்தினரால் குறிப்பிடப்படும் 80பேருக்கு மாத்திரம் ஆலயத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு விசேட அனுமதிபத்திரமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்டவர்களை தவிர ஏனைய பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதுடன்,

ஆலயத்திற்கு செல்லும் இரு பிரதான வாயிலிலும் பொலிஸாரினால் வீதிதடை ஏற்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேர்த்திகடன்களை செலுத்தும் அடியவர்கள் பிறிதொரு தினத்தில் அதனை செலுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன, மேலதிக அராங்க அதிபர் தி.திரேஸ்குமார், உதவி பொலிஸ் அத்தியட்சகர்,

உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா, வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் இ.தணிகாசலம், வைத்தியர் லவன், ஆலய நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.