மன்னார் மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வலியுறுத்தி போராட்டம்!!

460

Mannar

மன்னார் மாவட்ட மக்களுக்கு எதிராக இடம்பெறும் மோசடிகளை ஆராயும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (10) மாலை மன்னார் விடுதி ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களாக வினோ நோதரலிங்கம், சிவசக்தி ஆனந்தன், மற்றும் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்பணி அந்தோனி விக்டர் சூசை, மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை, மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேசுதாசன் ஜேம்ஸ், நானாட்டான் பிரதேச சபை தலைவர் அன்புராஜ், மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் மோசடிகள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு குறிப்பாக மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழி தொடர்பில் உடனடியாக சர்வதேச விசாரணையினை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.



அதேபோன்று இந்திய வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகளினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கு நீதியான முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவேண்டும்.

மாவட்டத்தில் சட்ட விரோதமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியும் அதேபோன்று மாவட்டத்தின் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதன்போது மாவட்டத்தில் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கிராம பிரதிநிதிகளினால் அவர்களது கிராமங்களில் எதிர்நோக்கம் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி குறித்த பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து மக்களும் ஒன்றினைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி குறித்த கவன ஈப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.