மூன்று மாதங்களின் பின் பாடசாலை செல்லவுள்ள மாணவர்கள் : சில நெருக்கடிகள் ஏற்படலாம் என தெரிவிப்பு!!

1361

மூன்று மாதங்களின் பின்..

சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் தெரிவு செய்யப்பட்ட வகுப்பு மாணவர்களுக்காக நாளைய தினம் பாடசாலைகள் ஆரம்பமாகின்றன. இந்த நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு உத்தரவிடடுள்ளது.

ஆசிரியர்களுக்கான கடமைகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது. எனினும் வகுப்பு ஒன்றுக்கு 50 மாணவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட வேண்டும் என்ற பணிப்பின்கீழ் அதற்கு அதிகமாக இருக்கும் வகுப்புக்களின் மாணவர்களுக்கு ஒன்றுக்குமேற்பட்ட தடவைகளில் ஒரு ஆசிரியர் ஒரே பாடத்தை கற்பிக்கும் நிலை ஏற்படும் என்று ஆசிரியர்கள் மத்தியில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதேவேளை மாணவர்களின் கைகளை கழுவும் மற்றும் அவசர நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதி போதுமானதாக இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் இந்த செயற்பாட்டுக்காக மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து பத்தாயிரம் ரூபா முதல் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபா வரை அனுமதித்திருக்கிறது.

எனினும் நோயாளர் அறை ஒன்றை அமைப்பதற்கு நிதியை தேடவேண்டிய நிலை பாடசாலை நிர்வாகங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைவிட முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்போது வகுப்பு அறைகளின் இடவசதிகள் அதற்கு பாதகமாக இருக்கும் என்று ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.