முகநூல் மூலம் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை நடத்திய 39 பேர் கைது!!

213

39 பேர் கைது..

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை கெஸ்பேவ மாற்று வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை நடத்திய 39 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் பெரும் சத்தத்தை ஏற்படுத்தியவாறு நள்ளிரவு 12 மணியளவில் பாதுகாப்பின்றி, ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடுவதை பொலிஸார் இரகசியமாக கண்காணித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி சமூக வலைத்தளமான முகநூல் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போட்டியில் கலந்துக்கொண்ட இளைஞர்கள், பிலியந்தலை, பண்டாரகமை, மகரகமை, தெஹிவளை, கல்கிஸ்சை, ஹோமாகமை உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் தெரியவந்துள்ளது.