நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் பலி!!

448

விபத்துக்கள்..

நாட்டில் வாகன விபத்துக்களினால் ஏற்படுகின்ற இறப்பு சம்பவம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளனர்.

பொரளை, ஹங்வெல்ல, பன்னலை மற்றும் சப்புகஸ்கந்த ஆகிய பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொரளை பகுதியில் நேற்று (28) மாலை இடம்பெற்ற விபத்தில் 42 வயதுடைய பெண்ணொருவர் பலியாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, ஹங்வெல்ல அட்டிகல மீகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததுடன் எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்து சம்பவம் நடந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பதுளையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் இதேவேளை, பன்னலை – குளியாப்பிட்டி வீதியின் யக்பில பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார்சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யக்பில பகுதி​யைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே விபத்தில் பலியாகியுள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முந்திச்செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று கொள்கலனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கடவத்தையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.