வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற ஈச்சங்குளம் விநாயகர் ஆலய இரதோற்சவம்!!

1068

இரதோற்சவம்..

வவுனியா ஈச்சங்குளம் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலய இரதோற்சவம் இன்று (31.08.2020) காலை 9.30 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.

வந்தோரை வாழவைக்கும் வவுனியா மண்ணில் ஈச்சங்குளம் – சாஸ்திரிகூழாங்குளம் மக்களின் வழிபாட்டுக்குரிய ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் கந்த கணேசதாஸக் குருக்கள் தலைமையில் இரதோற்சவம் இடம்பெற்றது.

அந்தணச் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி விசேட அபிடேக தீபராதனைகளை நிகழ்த்த, விநாயகப் பெருமான் உள்வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து வெளிவீதியில் தேரில் எழுந்தருளிய விநாயகப் பெருமானை பக்த அடியார்கள் அரோகரா கோசத்துடன் ஆண்களும், பெண்களுமாக வடம் பிடித்து தேரில் இழுத்துச் சென்றனர்.

பக்த அடியார்கள் தேவார திருவாசங்களை ஓதியும், கற்பூரச் சட்டிகளை ஏந்தியும் விநாயகப் பெருமானை வழிபட. விநாயகப் பெருமானும் அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

குறித்த இரதோற்சவத்தின் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 300க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.