மட்டக்களப்பில் கடத்தப்பட்ட மாணவி பாசிக்குடாவில் மீட்பு : மூவர் கைது!!

611

Kidnapமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் நேற்று பிற்பகல் தனியார் வகுப்புக்குசென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டார்.

இந்நிலையில் குறித்த மாணவி பாசிக்குடா பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த மாணவியை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் மூவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் சிவபுரத்தினை சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவர் தினமும் முச்சக்கர வண்டியில் தனியார் வகுப்புக்கு சென்றுவந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை வேறு ஒரு முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் வழமையாக வரும் முச்சக்கர வண்டிக்காரருக்கு காயம் காரணமாக வரமுடியவில்லை. தமது முச்சக்கர வண்டியில் வருமாறு கோரியுள்ளார்.

மாணவி குறித்த முச்சக்கர வண்டியில் சென்றபோது களுவாஞ்சிகுடியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டிருந்த போது மேலும் இரு இளைஞர்கள் குறித்த முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவியின் வாயினையும் காலினையும் கட்டி மாணவியினை பாசிக்குடா பகுதிக்கு கடத்திச்சென்றுள்ளனர். இது தொடர்பில் பெற்றோருக்கு ஏற்பட்ட சந்தேக நிலையினை தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கவே உடனடியாக செயற்பட்ட களுவாஞ்சிடி பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்ற தடுப்பு பிரிவினர் கல்குடா பொலிஸாருக்கு இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் விரைவாக செயற்பட்ட கல்குடா பொலிஸார் விடுதி ஒன்றில் இருந்து குறித்த யுவதியை பாதுகாப்பாக மீட்டதுடன் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவரை கைதுசெய்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை மாலை அங்கு சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸார் மாணவியை களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்ததுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவரையும் அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.