வயல் காணி..
வவுனியா – இறம்பைக்குளம் குளப்பகுதியில் காணப்படும் வயல் காணியில் மேற்கொள்ளப்படும் மண் நிரவி மதில் அமைக்கும் பணிக்கு எ திராக அப்பகுதி மக்களால் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நேற்று மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா இறம்பைக்குளம் சங்கரப்பிள்ளை வீதியின் வலப்பக்கம் காணப்படும் குளத்தை அண்டிய வயல் காணிக்கு உரிமை கோரியவர்கள் சிலரால் அப்பகுதிக்கு மண் நிரவி மதில் அமைக்கும் பணிகளை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே இவ்வாறு வயல் காணிக்கு மண் நிரவி மதில் அமைப்பதால் குளத்திற்கு செல்லும் மழை வெள்ளம் தேங்கி அப்பகுதியில் மழைகாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலை காணப்படுகின்றது.
எனவே இதனால் அப்பகுதியை சூழவுள்ள பகுதியில் குடியிருக்கும் எமக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும் நிலை காணப்படுவதுடன் அங்குள்ள ஆலயத்திற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்நடவடிக்கையினை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி அங்கு வசிக்கும் மக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று நேற்று பிற்பகல் வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து வன்னிப்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, நடவடிக்கை மேற்கொள்வதற்காக அம் மகஜர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழ்வின்-