காதலியை கொன்று விட்டு ஆவி பழிவாங்கிவிடும் என்ற பயத்தில் பூஜை செய்த காதலன்!!

608

Murderஆவி பழிவாங்கும் என பயந்து காதலியை கொன்று புதைத்த இடத்தில் பூஜை செய்த காதலன் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.

நாகை மாவட்டம் வடக்கு பொய்கைநல்லூர் காரைக்குளத்தில் உள்ள வெற்றுக் காணியில் கடந்த 14ம் திகதி காதலர் தினத்தன்று பூ, ஊதுபத்தி, வளையல், ரிப்பன் ஆகியவற்றை வைத்து யாரோ பூஜை செய்திருந்தனர்.

இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் இதுகுறித்த தகவலின் பேரில், வேளாங்கண்ணி பொலிசார் அங்கு சென்று இடத்தை தோண்டி பார்த்த போது இளம்பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டதும், அவர் நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மீனவர் சிங்காரவேலு – தெய்வானை தம்பதியின் மகள் சூர்யா என்பதும் தெரியவந்தது.

வேளாங்கண்ணி பொலிசார் வழக்குபதிவு செய்து சூர்யாவின் காதலன் ஞானவேல் (23), அவரது நண்பர்கள் தீபன்ராஜ் (23), கிங் சசிக்குமார் (19) மற்றும் 17 வயது வாலிபர்கள் 2 பேரை கைது செய்து விசாரித்தனர்.

சூர்யாவை கொலை செய்ததை 5 பேரும் ஒப்புக் கொண்டனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ஞானவேலுவும், சூர்யாவும் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சூர்யா கர்ப்பமானார். சூர்யாவின் பெற்றோர் அவருக்கு கருக்கலைப்பு செய்து விட்டனர். அதன்பிறகு காதலர்கள் இருவரும் சந்திப்பதற்கு இரு வீட்டிலும் தடை விதித்தனர்.

சூர்யா கர்ப்பமானது வெளியில் தெரிந்ததால் அக்கம் பக்கத்தினர் அவரை தவறாக பேசியதாக தெரிகிறது. ஞானவேலின் பெற்றோரும் சூர்யாவை தரக் குறைவாக பேசியுள்ளனர். இதனால் ஞானவேலுக்கும் கெட்டப் பெயர் ஏற்பட்டதால் காதலி கதையை முடிக்க எண்ணியுள்ளார்.

கடந்த மாதம் 30ம் திகதி சூர்யாவை சந்தித்த ஞானவேல், அவரை அருகில் உள்ள மனோன்மணி கோயிலுக்கு அழைத்துள்ளார். அதன்படி சூர்யா, கோயிலுக்கு சென்றார். அங்கு பைக்குடன் நின்றிருந்த ஞானவேல், அவரது நண்பர் தீபன்ராஜ் ஆகியோர் சூர்யாவை பைக்கில் கடற்கரையோரமாக அழைத்துச் சென்றனர்.

காரைக்குளம் என்ற இடத்துக்கு வந்ததும் பைக்கை நண்பனிடம் கொடுத்து விட்டு ஞானவேல் சூர்யாவுடன் மறைவிடத்துக்கு சென்றார். தீபன்ராஜ் பைக்கில் அக்கரைப்பேட்டைக்கு வந்து தனது நண்பர்கள் கிங் சசிக்குமார் மற்றும் 17 வயதுள்ள 2 பேரை அழைத்துக் கொண்டு மீண்டும் காரைக்குளம் வந்தார். அங்கு ஞானவேலுவும், சூர்யாவும் பேசிக் கொண்டிருந்த இடத்தில் இருந்து 15 மீற்றர் தொலைவில் 4 பேரும் அமர்ந்து கொண்டனர்.

அடுத்த நாள் அதிகாலை 4 மணி அளவில் ஞானவேல் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரும் திடீரென்று சூர்யா மீது பாய்ந்து பிடித்தனர். பின்னர் ஞானவேல் சூர்யாவின் கழுத்தை பிளேடால் அறுத்து கொன்றார். பின்னர் 5 பேரும் சேர்ந்து மணலை கைகளால் 2 அடி வரை தோண்டி உடலை புதைத்து விட்டு தப்பினர். காதலியை கொன்ற ஞானவேல் மனநிம்மதியில்லாமல் தவித்து வந்துள்ளார்.

மேலும் சூர்யாவின் ஆவி தன்னை பழிவாங்கும் என நண்பர்களுடன் கூறி புலம்பினார். இதனால் 16ம் நாள் சடங்குகளை செய்து விட்டால், சூர்யாவின் ஆத்மா சாந்தியடைந்துவிடும் என நண்பர்கள் யோசனை தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த 14ம் திகதி நண்பர்களுடன் சூர்யாவை புதைத்த இடத்துக்கு சென்ற ஞானவேல் பூ, பழம், ரிபன், வளையல் வைத்து பால் ஊற்றி பூஜை செய்துள்ளார். அதன்மூலம் 5 பேரும் பொலிசில் சிக்கினர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நாகை சிறையில் அடைக்கப்பட்டனர்.