யாழ். கரவெட்டி ஆசிரியர் ஒருவர் தன்னை சிலர் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து, சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதி அமைப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக்கூறி தன்னை சிலர் ஏமாற்றி 83 இலட்சம் ரூபா வரையிலும் மோசடி செய்துள்ளதாக கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் நேற்று முதல் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.
குறித்த ஆசிரியர் அவ்விடத்தில் மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதியினை நிர்மாணிக்க முனைந்ததுடன், அதற்காக தெரிந்தவர்கள் சிலரைக் கொண்டு அதற்கான அனுமதிப்பத்திரம் பெற முனைந்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பிலிருந்து வந்த தம்மை இலங்கை சுற்றுலா சபையினர் என்று அடையாளங் காட்டிய 6 பேர் தாங்கள் அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகவும் அதற்காக பணம் தரும்படியும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த நபர்களுக்கு 83 இலட்சம் ரூபா வரையில் பணம் கொடுத்துள்ளதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார். அத்துடன், சுற்றுலா சபையென அடையாளங்காட்டிய நபர்கள் இவருக்கு அனுமதிப்பத்திரம் ஒன்றையும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் அந்த அனுமதிப்பத்திரத்தினை பரிசோதனை செய்தபோது அது போலியானதென்று தெரியவந்துள்ளது.
வட்டிக்கு கடன் வாங்கி குறித்த மதுபானசாலையுடன் கூடிய விருந்தினர் விடுதியினை நடத்த முற்பட்ட மேற்படி ஆசிரியர் தற்போது, அதனை நடத்தமுடியாததால் கடன்காரர்கள் தன்னை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனர்.
எனவே தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறியே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.