இலங்கையில் அமுலுக்கு வரும் கடுமையான சட்டங்கள் : மீறினால் 6 மாத சிறைத் தண்டனை!!

925

கடுமையான சட்டங்கள்..

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை சட்டமாக்கவுள்ளதாக அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் நாட்களில் பகிரங்கப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கு நீதிமன்றத்தினால் முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் சுகாதார தன்மையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீரமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கமைய நோய் பாதிப்பு அதிகமாக உள்ள பிரதேசங்களில் சுகாதார பணிப்பாளர் வெளியிட்ட சட்டங்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

முகக் கவசம் அணியாதவர்களுக்கும், ஒரு மீற்றர் தூரத்தை பிற்பற்றாதவர்களுக்கும், சில பிரதேசங்களுக்கு செல்லும் போது காய்ச்சல் பரிசோதிக்காதவர்களுக்கும் எதிராக சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படும்.

அதற்கமைய சுகாதார பணிப்பாளரினால் நோய் தொற்றும் பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் இந்த சுகாதார சட்ட திட்டங்களை மீறும் நபர்களுக்கு பத்தாயிரம் ரூபாவுக்கு குறையாத அபராதம் மற்றும் 6 மாத தண்டனை வழங்க நீதிமன்றத்தினால் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.