பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளராக காசிலிங்கம் கீதநாத் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் இன்றைய தினம் நியமிக்கப் பட்டுள்ளார்.
பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது காசிலிங்கம் கீதநாத் எதிர்க்கட்சித் தலைவரின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு பணிப்பாளராகவும்,
தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் பிரத்தியேக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச 2015 முதல் 2019 வரை இந்தியாவிற்கு மேற்கொண்ட அனைத்து சுற்றுப்பயணங்களையும் திட்டமிட்டு செயற்படுத்தி அதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன்,
இன்று வரையான இந்திய – இலங்கையின் வலுவான இணைப்புக்களில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் ஒருவராகவும் உள்ளவர் என தெரியவருகிறது.
பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் மிக நெருக்கமாக நீண்டகாலம் பணியாற்றிவரும் கீதநாத் காசிலிங்கம் வடக்கு – கிழக்கு சார்ந்த அபிவிருத்தி விடயத்திலும் பிரதமர் சார்பில் நேரடியாக வேலைத் திட்டங்களை அமுல்படுத்தும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதமர் சார்பில் தமிழர் ஒருவர் ஒருங்கிணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.