தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் 48 மணி நேரத்திற்குள் வீடுகளுக்கு மாற்றப்படுவார்கள் : இராணுவத் தளபதி!!

698

தனிமைப்படுத்தல் நிலையங்களில்..

கொரோனா தொடர்பில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வீடுகளில் தனிமைப்படுத்தல்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்களிடம் நேற்று இதனை தெரிவித்த அவர், வீடுகளில் தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு 14 நாட்களுக்கான நிவாரணப்பொதிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

14 நாட்களுக்கு வெளியில் சென்று அத்தியாசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்துக்காகவே நிவாரணப்பொதிகள் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தொற்றாளிகளின் முதல் தொடர்பாளர்கள் இனிவரும் காலத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச்செல்லப்படாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற தீர்மானத்தையும் அரசாங்கம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வந்து தனிமைப்படுத்தும்போது பீ.சீ.ஆர் பரிசோதனைகள் உட்பட்ட தங்குமிட விடயங்களுக்கு ஏற்படும் செலவுகளை அவர்களே ஏற்கவேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.