காங்கிரஸ் கட்சி எம்பி ரம்யாவை கடத்தப்போவதாக விளம்பரம் வெளியிட்ட சினிமா இயக்குனரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பிரபல நடிகை குத்து ரம்யா, தற்போது மண்டியா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகம் இருந்து வருகிறார்.
கடந்த 14ம் திகதி காதலர் தினத்தன்று பெங்களூரில் வெளிவரும் ஆங்கில நாளிதழில் நடிகை ரம்யாவுக்கு, கன்னட சினிமா இயக்குனரும், நடிகருமான வெங்கட் என்பவருடன் பனசங்கரி கோவிலில் திருமணம் நடைபெற இருப்பதாக கன்னட மொழியில் விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தது.
அந்த விளம்பரத்தில் ரம்யா ஏன் என்னுடைய எண்ணங்களை நீ புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய். என்னுடைய காதலை ஏற்று கொள்வாயா, மாட்டாயா என்று எனக்கு தெரியாது.
அடுத்த வாரம் உன்னை கடத்திச் சென்று பனசங்கரியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொள்வேன். இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இது படத்திற்காக சாதாரணமாக எழுதப்பட்டது அல்ல. உண்மையில் இது நடைபெறும்.
மேலும் படத்திற்கு ஹுச்சா வெங்கட் (பைத்தியகார வெங்கட்) என்ற தலைப்பு வைத்துள்ளேன். கதை, திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். இந்த படத்தை என்னுடைய பெற்றோர் , என்னுடைய மனைவி ரம்யா, மாமியார் ரஞ்சிதா (ரம்யாவின் தாய்) ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பெங்களூர் கப்பன்பார்க் பொலிசார் தாமாகவே முன்வந்து ரம்யாவுக்கு எதிராக விளம்பரம் செய்த சினிமா இயக்குனர், நடிகரான வெங்கட் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து நடிகர் வெங்கட்டை கப்பன் பார்க் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வெங்கட்டின் பெற்றோர் பொலிஸ் நிலையம் விரைந்து சென்று, தங்களது மகன் வெங்கட் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பொலிசாரிடம் கேட்டுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடிகர் வெங்கட்டை பொலிசார் கைது செய்யாமல், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.




