வட மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி : வைத்தியர் த.சத்தியமூர்த்தி!!

1604

கொரோனா..

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் என வடக்கு மாகாணத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தின் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – உடுவிலில் தாய் மற்றும் 10 அகவையைக்கொண்ட மகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு – மாளிகாவத்தையில் வசிக்கும் பெண் தனது மகளுடன், உடுவில் அம்பலவாணர் வீதியில் உதயசூரியன் சந்தியில் வசிக்கும் தனது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்த வேளை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் நேற்று முன்தினம் மாதிரிகள் பெறப்பட்டன. அவை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு அவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மாளிகாவத்தையில் வர்த்தகத்தில் ஈடுபடும் கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையிலேயே பெண் தனது மகளுடன் உடுவிலில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, தாயார் மற்றும் சகோதரி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொழும்பு – வெள்ளவத்தையில் இயங்கும் விருந்தக உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் அங்கு பணியாற்றிய புங்குடுதீவைச் சேர்ந்த இருவர், வேலணையில் ஒருவர் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒருவர் என்று நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.