மன்னார் மாவட்டத்தில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று!!

587


கொரோனா..



மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1083 பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 12 பேர் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார்.



மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,




மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்றுள்ளவர்கள் 12 பேர் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 10 பேர் பட்டித்தோட்டம் பகுதியில் கட்டிட வேளையில் ஈடுபட்ட போது தொற்று உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.


ஏனைய இரண்டு பேரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்பு உள்ளவர்கள். இவர்களில் 11 பேர் இரணவில சிகிச்சை நிலையத்திற்கும், ஒருவர் கந்தக்காடு சிகிச்சை நிலையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் 9 பேர் தமது சிகிச்சைகளை நிறைவு செய்து தமது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 1083 பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அவற்றில் 767 பீ.சி.ஆர் பரிசோதனைகள் யாழ் . போதனா வைத்தியசாலையிலும், 316 பீ.சி.ஆர். பரிசோதனைகள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த பரிசோதனைகளின் போதே குறித்த 12 பேரும் கொரோனா தெற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

தற்போது தொற்று உடையவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் என்ற அடிப்படையிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் இருந்து இங்கு வந்து தங்கி இருந்த நிலையில் 173 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் தொற்றுள்ள ஒருவருடன் தொடர்பில் இருந்த 33 பேருக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் கொழும்பில் தொற்று உள்ளவர் என அடையாளம் காணப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும், முசலி பகுதியில் கொழும்பு மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து வந்து தங்கி இருந்தவர்களுக்கும் நாளை பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதோடு மாந்தை மேற்கு மூன்றாம் பிட்டி பகுதியிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.