
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பிரதேசத்தில் உள்ள இலங்கையில் பிறந்த பத்திரிகை முகவர் ஒருவர் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
லிட்டில் மோர் நியூஸ் என்ற பத்திரிகை விற்பனை நிலையத்தை நடத்தி வரும் உள்ளூரில் கரு என அறியப்பட்ட விஜய பண்டார கருணாரட்ன என்ற இலங்கையர், கத்தி மற்றும் சுத்தியலுடன் முகமூடி அணிந்து சென்ற இரண்டு நபர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
விற்பனை நிலையத்தின் உரிமையாளரான அவர் லிட்டில் மோர் பெரிஷ் நகர உறுப்பினராகவும் இருந்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விற்பனை நிலையத்திற்குள் சென்ற கொள்ளையர்கள், கடுமையாக தாக்கியும், கத்தியால் தாக்கியும் காயம் ஏற்படுத்தி விட்டு, பணத்தை எடுத்து கொண்டு கௌலி வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
கௌலி வீதியில் லிட்டில் மோர் மினி மார்க்கட்டை நடத்தி வரும் 49 வயதான அப்துல் கபூர் என்பவர், கருவின் விற்பனை நிலையத்திற்கு சென்று பார்த்த போது அவரது நண்பரான கரு உடலில் இரத்தம் வடிய மடியில் அமர்ந்திருப்பதை கண்டுள்ளார். இது குறித்து கபூர் தெரிவிக்கையில்,
அங்கிருந்தவர்கள். கருவின் உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவதை தடுக்க முயற்சித்தனர். அவர் சிறந்த மனிதர். மிக நீண்டகாலமாக இங்கு இருந்து வருகிறார். எப்போதும் இவ்வாறு நடந்ததில்லை என்றார்.
அதேவேளை இந்த சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட ஒக்ஸ்போர்ட் நகர சபையின் லிட்டில்மோர் உறுப்பினர் கில் சான்டர்ஸ், கருவுக்கு நடந்த இந்த சம்பவம் வருத்தமளிப்பதுடன் துரதிஷ்டவசமானது என தெரிவித்தார்.
இந்த கொள்ளைச் சம்பவத்தை அடுத்து கருவின் விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள சிகையலங்கார நிலையத்தை நடத்தி வரும் நபரே சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார்.
இந்த நிலையில, நேற்றும், நேற்றிரவும் கொள்ளையர்களை கைது செய்ய சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை கைது செய்வதற்கான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
கொள்ளைச் சம்பவத்திற்கு பின்னர் கொள்ளையர்களை பின் தொடர்ந்தும் கைது செய்ய பொலிஸார் ஹெலிகாப்டரையும் பயன்படுத்தி தேடுதல் நடத்தினர்.





