வவுனியா மாவட்ட விவசாயிகளின் பயிர்களுக்கு காப்புறுதி திட்டம் அறிமுகம்!!

749

காப்புறுதி திட்டம்..

வவுனியா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனமும் சணச ஜெனரல் இன்ஷரன்ஸ் நிறுவனத்தினரும் இணைந்து காப்புறுதி திட்ட ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டுள்ளனர்.

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தின் மாவட்ட காரியாலயத்தில் இன்று இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது.

நெல், உழுந்து, கச்சான் , சோழம் போன்ற பயிர்களுக்கும் பப்பாசி, வாழை போன்ற மரங்களுக்கும் ஆடு, மாடு, கோழி போன்ற விவசாயம் சம்பந்தப்பட்ட உயிரினங்களுக்குமான காப்புறுதி திட்டமே இவ்வாறு கைசாத்திடப்பட்டதாகும்.

ஒரு விவசாயி 5 ஏக்கருக்கு காப்புறுதியினை மேற்கொள்ள முடிவதுடன் ஒரு ஏக்கருக்காக காப்புறுதி தொகை 1500 ரூபா தொடக்கம் 1800 வரையில் செலுத்த வேண்டும்.

மேலும் வெள்ளம், வறட்சி, நோய்கள், வன விலங்குகளின் அச்சுறுத்தல் போன்றவற்றிக்கு காப்புறுதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புறுதி தொடர்பான மேலதிக விடயங்களுக்கு விவசாயிகள் வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளன காரியாலயத்தினை தொடர்பு கொள்ளுமாறும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.