வவுனியாவில் வன்னி தேர்தல் தொகுதியில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம்!!

1085

வன்னி தேர்தல் தொகுதியில்..

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ மற்றுமொரு கட்டம்,

இன்று 2020.11.08 (திங்கட்கிழமை) வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் அடிப்படையில் சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கு அரச பொறிமுறையை கிராமத்தை நோக்கி கொண்டு செல்வது இவ்வேலைத்திட்டத்தின் அடிப்படையாகும்.

அமைச்சர் நாமல் ராஜபக்வின் தலைமையில் கூடிய ‘சமூக உட்கட்டமைப்பு குழு’வினால் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கான அமைச்சினால் எதிர்வரும் ஆண்டில் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

அதிகாரிகளினால் மாவட்டத்திற்குள் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களினால் அப்பிரச்சினைகள் தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் பதிலளிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பிரியங்கர ஜயரத்ன, பியல் நிசாந்த, சிசிர ஜயகொடி, வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ், வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் மாவட்ட அரச அதிபர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.