கிளிநொச்சியில் உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் மீது இடிந்து விழுந்த சுவர் : பரிதாபமாக பலியான சிறுவன்!!

1470

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் தற்காலிக வீடொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கரைச்சி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர்தேங்கியுள்ளது. இதன்காரணமாக தற்காலிக வீட்டின் சுவர் பலவீனமடைந்து உணவருந்திக் கொண்டிருந்த சிறுவன் மீது உடைந்து விழுந்துள்ளது.

இடிபாட்டுக்குள் சிக்கிய சிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 8 வயதான நிரோயன் றுசாந்தன் என்ற சிறுவனே பலியாகியுள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த பகுதியில் வெள்ளநீர் தேங்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வருடம் தோறும் 40 குடும்பங்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அரசின் காலத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் மிகுதி பணம் வழங்கப்படாமையினாலேயே நிரந்தர வீட்டுக்குள் செல்ல முடியாது போயுள்ளதாகவும், நிரந்தர வீடு அமைப்பதற்கான மிகுதி பணத்தினை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.