வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தீபாவளி கொண்டாட்டம் தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை!!

878

தீபாவளி கொண்டாட்டம் தொடர்பில்..

ஒன்று கூடல்களை தவிர்த்து வீடுகளில் இருந்து இம்முறை தீபாவளியை கொண்டாடுங்கள் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (13.11.2020) காலை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று இலங்கையில் மிக தீவிரமாக பரவி வரும் நிலைமை காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலிருந்து அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து மாவட்டங்களுக்கும் தொற்று பரவிவருகின்றது இந்த நிலையில் வவுனியா மாவட்ட மக்களுக்கு நாம் தெரிவித்து கொள்வது என்னவென்றால்,

சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றி தங்களுடைய அன்றாட செயற்பாடுகளை செயற்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தற்போது பண்டிகை காலமாக இருக்கின்ற படியால் அதாவது தீபாவளி பண்டிகை அதேபோல்,

கந்தசஷ்டி விரதம் மற்றும் இந்துக்களின் கௌரிக் காப்பு விரதம் என்பன தற்காலத்தில் இடம்பெறவுள்ளமையால் மக்கள் அதிகளவில் ஒன்று கூடாமல் தங்களுடைய வழிபாடுகளை வீடுகளில் இருந்தவாறு செய்வது மிகப் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் இந்த பண்டிகைக்காலத்தில் வழமை போன்று வர்த்தக நிலையங்களுக்குச் சென்று பொருட்கொள்வனவு செய்வது போன்ற விடயங்களில் ஈடுபடுவோர் அவற்றை மிக கவனமாக செயற்படுத்த வேண்டும்.

அதிகமாக ஒன்று கூடாது தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் அதாவது குடும்பத்தில் ஓரிருவர் மட்டும் சென்று தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து பொருட்களை கொள்வனவு செய்யுங்கள்.

ஆகவே மாவட்டத்தின் சீரான இயக்கத்திற்கும் மக்களுடைய மேலான ஒத்துழைப்பு மிகவும் அவசியம். எனவே இந்த கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி இந்த பண்டிகைக்கான பொருள் கொள்வனவு மற்றும் பண்டிகை கொண்டாடுவதை மிக அவதானமாக செய்ய வேண்டும் என இந்த சந்தர்ப்பத்திலே வினயமாக கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.