வவுனியாவில் உணவகங்களை வழமை போல செயற்பட அனுமதியுங்கள் : செந்தில்நாதன் மயூரன்!!

849


வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள உணகவங்களில் வழமைபோல அமர்ந்திருந்து உணவருந்துவதற்கு அனுமதி வழங்குமாறு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.



குறித்த விடயம் தொடர்பாக அவர் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு உணவகங்களில் அமர்ந்திருந்து உணவு உண்பதற்கான நடைமுறை சுகாதாரபிரிவினரால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், உணவுகளை பொதிசெய்து விற்பனை செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இந்த செயற்பாடு உணவக உரிமையாளர்களிற்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் உணவருந்தச் செல்லும் பொதுமக்களும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.



குறிப்பாக பல்வேறு தேவைகளின் நிமித்தம் வவுனியா நகருக்கு வருகைதரும் தூர இடங்களை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


உணவகங்களிற்கும் அப்பால் பொதுமக்கள் அதிகம் சென்றுவரக்கூடிய ஆடை விற்பனை நிலையங்கள் உட்பட அத்தியாவசியமற்ற பல்வேறு வியாபார ஸ்தாபனங்களின் செயற்பாடுகள் வவுனியாவில் வழமைபோல இடம்பெற்று வருகின்ற நிலையில் உணவகங்களிற்கு மாத்திரம் எதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்பதை சுகாதார தரப்பினரே தெளிவுபடுத்தவேண்டும்.

எனவே பொதுமக்களின் நலன் கருதி உரிய சுகாதார பாதுகாப்புநடைமுறைகளை கடைப்பிடித்து, சமூக இடைவெளியை பேணி உணவகங்களின் செயற்பாட்டை வழமைபோல முன்னெடுப்பதற்கு சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கவேண்டும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது