வவுனியா நகரசபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி!!

845

வரவு செலவுத் திட்டம்..

தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டில் உள்ள வவுனியா நகரசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் பாதீடு தொடர்பான அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று(19.11.2020) காலை இடம்பெற்றது. இதன்போது சபை தவிசாளரால் சபையில் வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.

இதனை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் லரீப் முன்மொழிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஜக்கரியாஸ் சலின்டன் வழிமொழிய தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல்எப், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஈபிடிபி ஆகிய கட்சிகளின் 19 உறுப்பினர்களின் ஆதரவுடன்
ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் உறுப்பினர் பி.யானுஜன் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பான ஈபிஆர்எல் உறுப்பினர் பாஸ்கரன் ஜெயவதனி ஆகியோர் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சபைக்கு சமூகமளித்திருந்தனர்.

இதேவேளை, வவுனியா நகரசபையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஈபிஆர்எல்எப் கட்சியை சேர்ந்த இ.கௌதமன் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சு.குமாரசாமி உப தவிசாளராகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.