மதில் இடிந்து விழுந்ததில்…

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்த சிறுவன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் புளியங்குளம், தேவநகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன் அர்ஜுன் (10 வயது) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.

காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக மதில் இடிந்து விழுந்த நிலையில் சிறுவன் அதில் சிக்குண்டதாவும், அயலவர்களின் உதவியுடன் அரை மணி நேரத்துக்குள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் சிறுவனின் இரண்டு கைகளும் உடைந்த நிலையில் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளன.





