நந்திக்கடலில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் சடலமாக மீட்பு!!

1486

நந்திக்கடலில்..

வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி புயல் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பொழிந்த நிலையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மழை மற்றும் காற்று காரணமாக நந்திக் கடற்கரையில் நிறுத்தி வைத்திருந்த வள்ளம் ஒன்று நந்திக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (03.12.2020) காலை 10.00 மணிக்குக் குறித்த வள்ளத்தை கரைக்குக்கொண்டு வருவதற்காகத் தனது சகோதரனுடன் பிறிதொரு வள்ளத்தில் சென்று காற்றில் அடித்துச் செல்லப்பட்ட வள்ளத்தில் ஏறியபோது குறித்த வள்ளத்துடன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்தைத் தொடர்ந்து கடற்படையினர், இராணுவத்தினர், மீனவர்கள் இணைந்து நந்திக்கடல் களப்பில் குறித்த மீனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை காணாமல் போயிருந்த கேப்பாபுலவு மாதிரிக்கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய ஜெயசீலன் சிலக்சன் என்பவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.