இந்தியாவில் பரவும் அடையாளம் காணப்படாத மர்ம நோய் : 300இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்!!

943

ஆந்திரப் பிரதேசத்தில்…

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் ஏலூரு நகரத்தில், அடையாளம் காணப்படாத ஒரு விதமான நோய் பரவி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட 300இற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் குழந்தைகள், பெண்கள் உட்பட 326 பேர் வெவ்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இந்த புதிய மர்ம நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு குமட்டல், வலிப்பு முதல் நினைவிழப்பு வரை பல அறிகுறிகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வந்திருப்பதாக, கூறப்படுகிறது.

இந்த அடையாளம் காணப்படாத நோயால் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாக குழந்தைகள், கண்கள் எரிவதாகக் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின் திடீரென வாந்தி எடுக்கத் தொடங்குவதாகவும், இன்னும் சிலர் மயங்கி விழுந்துவிடுவதாகவும் அல்லது வலிப்பு வந்துவிடுவதாகவும் குறித்த நோயாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் இரத்த மாதிரிகளில், எந்த விதமான வைரஸ் தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.