கெப் ரக வாகனம் விபத்து : ஒருவர் பலி, 10 பேர் உயிர் தப்பினர்!!

842

விபத்து..

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊவாகலை பகுதியில் இன்று (15.12.2020) முற்பகல் 10 மணியளவில் கெப் ரக வாகனமொன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 10 பேர் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.

லிந்துலை, மவுசாஎல்ல கீழ்பிரிவு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான எம்.இன்ஸமாம் (வயது – 32) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

அவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையிலிருந்து, நுவரெலியா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

லிந்துலை ஊவாகலை பகுதியில் வீதியொன்றை புனரமைப்பதற்காக சீமெந்து மூடைகளை ஏற்றிச்சென்ற கெப் ரக வாகனமே, இயந்திரகோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வாகனம் பள்ளத்தை நோக்கி சாயும் வேளையில் சாரதி உட்பட அதில் இருந்தவர்கள் வெளியே பாய்ந்து உயிர் தப்பினர். ஒருவர் மாத்திரம் வாகனத்துடன் கீழேசென்று உயிரிழந்துள்ளார்.

வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். லிந்துலை பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.