இதுவரை 14 பேருக்கு உறுதி..
வவுனியா திருநாவற்குளத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ம் திகதி இவர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் இவர்களிற்கு தொற்று ஏற்ப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகிய நிலையில் திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி, இரு பிள்ளைகள், உறவினர் என நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வவுனியாவில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா புதிய சாளம்பைக்குளத்தினை சேர்ந்த தாயும் பிள்ளையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிருந்து கொழும்பு சென்று வந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தாயுக்கும் பிள்ளைக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து புதிய சாளம்பைக்குளம் கிராமம் சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந் நிலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகிய நிலையில் அதே குடும்பத்தினை சேர்ந்த தந்தை, மேலும் இரு பிள்ளைகள் என மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய சாளம்பைக்குளம் கொத்தணியில் கோவிட் -19 தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு புதிய சாளம்பைக்குளம் கோவிட் -19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி, கந்தக்காடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கற்பிணிப் பெண் ஆகிய மூவருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
சுகயீனம் என வைத்தியசாலைக்கு சென்ற வவுனியா திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர், கற்குழி பகுதியினை சேர்ந்த பாடசாலை மாணவி என இருவருக்கும் எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
இதன் காரணமாக வவுனியா நகரின் கற்குழி முதலாம் ஒழுங்கை, திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கை என்பன சுகாதார பிரிவினரினால் முடக்கப்பட்டு அப்பகுதி மக்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையுடன்,
கற்குழி பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வவுனியாவில் CCTMS பாடசாலை, காமினி மகா வித்தியாலயம், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளும் புளியங்குளம் மகாவித்தியாலயமும் தற்காலிகமாக மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட அக் கிராமத்தினை சேர்ந்த மக்களிடம் சுகாதார பிரிவினர் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.
பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகிய நிலையில் திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவி, இரு பிள்ளைகள், உறவினர் என நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும் திருநாவற்குளத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் தொடர்புடைய வவுனியா நீதிமன்றில் கடமையாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டமையை அடுத்து குறித்த சட்டவாதியுடன் தொடர்புடையவர்களுக்கும் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. எனினும் பிசீஆர் முடிவுகள் என்னும் வெளியாகவில்லை.
புதிய சாளம்பைக்குளம் கொத்தணியில் ஐவரும், நீதிமன்ற வளாக கொத்தணியில் ஆறு நபர்களும், கற்குழி பாடசாலை மாணவி ஒருவர், சிறைச்சாலை கைதி ஒருவர், கந்தக்காடு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட நிறைமாத கர்பிணிப் பெண் ஒருவர் என இதுவரை 14 கொரோனா தொற்றாளர்கள் கடந்த ஒரு வாரத்தினுள் வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ளனர்.