அனைவரும் வீட்டிலேயே இருங்கள்..
நத்தார் பண்டிகையின் போது வீட்டிலேயே இருக்குமாறு பிரதி சுகாதார சேவை இயக்குனர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த காலப்பகுதியில் சுற்றுலா பயணம், உறவினர் வீட்டிற்கு செல்லுதல், உட்பட வினோத செயற்பாடுகளை நிறுத்துமாறும் வீட்டிலேயே இருக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார ஆலோசனைகளுக்கு எதிராக பண்டிகை காலப்பகுதியில் செயற்பட்டால் நாடு முழுவதும் கொரோனா கொத்தணிகள் ஏற்பட கூடும் என அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஓரிரு நாட்களில் நத்தார் பண்டிகை ஆரம்பமாகிறது. அத்துடன் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இந்த நாட்களில் பலர் தேவையற்ற சுற்றுலா பயணங்கள் செல்கின்றனர். உறவினர்கள் வீட்டிற்கு செல்கின்றனர். அதேபோன்று விருந்துகள் நடத்துகின்றனர்.
எனினும் தற்போது உள்ள நிலைமைக்கு மத்தியில் அவ்வாறு செய்வது பொருத்தமானதல்ல. அதனால் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டு, அனைத்தையும் தவிர்த்து வீட்டில் இருந்து நத்தாரை கொண்டாட வேண்டும்.
நத்தார் தினத்தன்றும் தேவாலயங்களில் அனைவரும் ஒன்றுக்கூட வேண்டாம். அனைவரும் வீட்டில் இருந்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.