வவுனியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!!

902

விசேட கலந்துரையாடல்..

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வருகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்தும் முகமாக விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (29.12.2020) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் இடம்பெற்ற இவ் விசேட கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் காதார் மஸ்தான், உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்,

பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மகேந்திரன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு, வவுனியா கமநல திணைக்கள பணிப்பாளர் இ.விஜயகுமார், வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன்,

வவுனியா உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.P.M.A.அசங்க காஞ்சன குமார, வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் உட்பட பல அரச நிறுவனங்களின் தலைவர்கள், இராணுவ உயர் அதிகாரிகள், இ.போச பேரூந்து சாலை அதிகாரி, சுகாதாரப் பிரிவினர், வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இக் கூட்டத்தின் போது வெளி மாவட்டத்திலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு வருகை தருபவர்கள் கட்டாயம் பி.சீ.ஆர் பரிசோதனை சான்றிதழ் அவசியமாக்கப்படுவதுடன், விடுமுறையில் ஊர்களுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பி.சி.ஆர் மேற்கொள்ளுவது,

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் காணப்படும் பகுதிகளுக்கு ஒரே சாரதி, நடத்துனர்களை சேவையில் ஈடுபடுத்துதல், முகக்கவசம் கட்டயாப்படுத்துதல் போன்ற பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.