வவுனியா நகரப் பகுதிக்குள் முடக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் : அச்சத்தில் மக்கள்!!

3749

வவுனியா நகரப் பகுதிக்குள்..

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடப்பட்ட பகுதியைச் சேர்ந்த பலர் வவுனியா நகரப்பகுதியில் வர்த்தக நிலையங்களுக்கும்,

அரச திணைக்களங்களுக்கும் காலையிலேயே வருகை தந்துள்ளதாகவும், அவர்களில் பலர் வீடுகளுக்கு செல்லாது பல்வேறு பகுதிகளில் நடமாடித் திரிவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் மற்றும் கர்ப்பிணிப் பெண் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அப்பகுதியின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஒழுங்கை, பட்டக்காட்டின் ஒரு பகுதி, வேப்பங்குளத்தின் ஒரு பகுதி என்பன சுகாதார பிரிவினரால் இன்று (04.01) காலை முடக்கப்பட்டது.

எனினும், குறித்த பகுதி முடக்கப்படுவதற்கு முன்பாகவே பலர் வர்த்த நிலையங்களை திறப்பதற்காகவும், அதில் கடமையாற்றுவதற்காகவும் தமது கிராமத்தில் இருந்து வெளியேறி சென்றுள்ளதுடன், வியாபார நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருதாக தெரியவருகிறது.

அத்துடன் அரச அலுவலங்களில் வேலை செய்யும் சிலரும் முன்னதாகவே வெளியேறி கடமை இடங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பரவலடையலாம் என்ற அச்ச நிலை சக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதுடன், பொது மக்களும் அச்சமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து சில திணைக்களுக்கு சென்றவர்களும், வர்த்தக நிலையங்களுக்கு சென்றவர்களும் திருப்பி அனுப்பப்பட்ட போதும் அவர்களில் பலர் வீடுகளுக்கு செல்லாது வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள,

உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் இதனால் வேறு பகுதிகளிலும் கொரோனா பரவலமையக் கூடிய அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் சுகாதார துறையினரும், பொலிசாரும் இணைந்து காத்திரமான நடவடிக்கை எடுத்து வவுனியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரியுள்ளனர்.