குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

1187

நீரில் மூழ்கி..

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (06.01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவளிபுரம் சஹாயமாதா வீதியில் வசித்து வரும் ரவீந்திரகுமார் ஜேனுஷன் (16 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்புவளிபுரம் பிரதேசத்திலுள்ள பாம் குளத்திற்கு மூன்று நண்பர்கள் சென்ற நிலையில் சக நண்பரொருவருடைய செருப்பைக் குளத்துக்குள் விளையாட்டுக்காக வீசியபோது அதனை எடுக்கச் சென்றவர் நீரில் மூழ்கிய நிலையில், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.