வவுனியாவில் ஒரு வாரத்தில் 62 பேருக்கு கொரோனா தொற்று : முடக்கப்பட்ட சில பகுதிகள்!!

2231

முடக்கப்பட்ட சில பகுதிகள்..

வவுனியாவில் கடந்த ஒரு வாரத்தினுள் 62 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நகரின் சில வீதிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையுடன் மாற்று வீதியினை பயன்படுத்துமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதுடன் பட்டானிச்சூர் பகுதி சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய முடக்கப்பட்டது.

இந்நிலையில் பட்டானிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த புதன்கிழமை (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என 204 பேருக்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த பிசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (08.01) மதியம் வெளியாகிய நிலையில் பெண் ஒருவர் உட்பட 55 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து குறித்த 55 பேரையும் கொரோனா தடுப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனையடுத்து நேற்று (08.01) இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் அப் பகுதியினுள் எவரும் உள் செல்லவும், வெளிச்செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இன்று (09.01) காலை 10.00 மணி தொடக்கம் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி என்பனவும் பொலிஸாரினால் முடக்கப்பட்டு அப்பகுதி வர்த்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் சுகாதார பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா – திருகோணமலை பிரதான வீதியான ஹொரவப்பொத்தானை வீதியின் சில பகுதி முடக்கப்பட்டுள்ளமையினால் சாரதிகள், பொதுமக்களை மாற்றுப் பாதையான கந்தசுவாமி கோவில் வீதி , முதலாம் குருக்குத்தெரு ஆகிய பாதைகளை பாவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.