வவுனியாவில் சில பகுதிகள் மறுஅறிவித்தல் வரை முடக்கம் : வர்த்தக நிலைய ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்!!

5904

சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்..

வவுனியா நகரின் சில பகுதியில் மறுஅறிவித்தல் வரை முடக்கப்படுவதுடன் நகரிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (09.01.2021) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 6ம் திகதி தர்மலிங்கம் வீதி , பஜார் வீதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பிரகாரம் 204 நபர்களுக்கு பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது. அதில் 54 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அந்த அடிப்படையில் இன்றையதினம் விசேடமான ஒர் கலந்துரையாடல் ஒன்று வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சுகாதார பிரிவினர், வன்னி பாதுகாப்பு படை பிரிவினர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களுடன் இடம்பெற்றிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் சுகாதார திணைக்களத்தின் வேண்டுகோளிற்கு அமைவாக நகரில் முக்கிய இடங்களில் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் சுகாதார தன்மையினை உறுதிப்படுத்துவதுடன் அவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு பி.சி.ஆர் பெறுபேறு வரும் வரை குறித்த வர்த்தக நிலையங்களை தற்காலிகமாக மூடுவது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடிப்படையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி முன்றயிலிருந்து குடியிருப்பு பிள்ளையார் கோவிலடி சந்தி வரையிலும், இறம்பைக்குளம் பெண்கள் பாடசாலை சந்தியடி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய சந்தி,

மன்னார் வீதியில் காமினி மாகா வித்தியாலயம் வரையிலான வீதி, புகையிரத நிலைய வீதி ஆகியவற்றினை மறு அறிவித்தல் வரை மூடுவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இவ்விடயம் தொடர்பான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் பாதிப்படையாது இருக்கும் வகையில் கூட்டுறவு சங்கம், மருந்து விற்பனை நிலையம், சதொச விற்பனை நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பி.சி.ஆர் மாதிரிகளை பெற்று அதன் பெறுபேற்றினை முன்வைக்குமாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாளையதினம் முதல் (10.01) மொத்த மரக்கறிகள் , பழங்கள் விற்பனை செய்பவர்கள் மன்னார் வீதியில் அமைந்துள்ள காமினி மகா வித்தியலாய மைதானத்தில் வியாபாரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் பாதையோர வியாபார நடவடிக்கைக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

வவுனியா நகரிலுள்ள வர்த்தகர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பெறுபேறுகள் வரும் வரையில் வவுனியா நகரின் நிலமை மீள் திரும்புவது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள முடியுமென என்பதுடன்,

பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படாத நபர்கள் மீதும் தனிமைப்படுத்தலை மீறி செயற்படுபவர்கள் மீதும் சட்டநடவடிக்கை மேற்கொள்வதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளதாகவும்,

மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நகரில் அமைந்துள்ள பாடசாலைகளான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் வித்தியாலயம், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், இலங்கை தமிழ் கலவன் பாடசாலை,

காமினி மகா வித்தியாலயம் போன்றன மறு அறிவித்தல் வரை மூடப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை (11.01) வழமை போன்று ஆரம்பமாகும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.